முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் 114 வது ஜெயந்தி விழா மற்றும் 59 வது குருபூஜை விழா அக்டோபர் 28, 29, 30 தினங்களில் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த சங்கிலி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குரு பூஜையை முன்னிட்டு, முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த தனியார் வாகனங்களில், பசும்பொன் செல்ல அனுமதி வழங்கக் கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கினால், அது கொரோனா நோய்ப்பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும் எனவே தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தனர்.