தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகப்படியாக பணம் பெறுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள விலை நிர்ணயத்தின் படி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய்களிடம் பணம் வசூல் செய்வதை முறைப்படுத்தக் கோரி,
மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடமிருந்து அதிகபட்சமாக 20 லட்சம் வரை பணம் வசூல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளிடம் அதிகப்படியாக பணம் பெறுவது மாநிலம் முழுவதும் பெரிய பிரச்சினையாக உள்ளது. கொரோனா நோயாளிகளிடம் அதிகப்படியாக பணம் பெறுவதை முறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தனர்
. தனியார், அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படும் படுக்கைகள் விவரம் வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால் பொதுமக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்றும் படுக்கை வசதிகள் இருப்பு குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் சாதாரண மக்களுக்கு படுக்கை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்தும், தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







