பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் (டிச.15) டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜோர்டான் புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து நேற்று (டிச.16) பிரதமர் மோடி எத்தியோப்பியா சென்றார். பிரதமர் மோடி விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்நாட்டின், ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருது அவருக்கு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது இந்த விருது வழங்கி கவுரவித்தார். மேலும், இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது இதுவாகும்.
விருது பெற்றது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியர்கள் அனைவரின் சார்பாக, இதனை பணிவுடன் நான் ஏற்று கொள்கிறேன். உலகின் மிக தொன்மையான மற்றும் செழிப்பான நாகரிகம் கொண்ட நாட்டின் இந்த விருது வழங்கப்பட்டது மிக சிறந்த பெருமைக்குரிய விசயம். இதற்கான அங்கீகாரம், இருதரப்பு நல்லுறவை வடிவமைக்க மற்றும் வலுப்படுத்திய எண்ணற்ற இந்தியர்களையே சேரும். இதனை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார்.







