மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடந்த 12-ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்குத் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என அறிவுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு நாட்கள் வீட்டுத் தனிமையிலிருந்த முதலமைச்சர் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தொடர்பான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். உடல் நலம் விசாரித்த பிரதமர் அவர்களுக்கு நன்றி கூறிய முதலமைச்சர், பிரதமரிடம் தான் நன்கு குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி துவங்க உள்ள உலக செஸ் விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததைக் குறிப்பிட்டுத் தான் தற்போது மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரதமர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.