கடத்தல்காரர்கள் போல நடித்து ரூ.2 கோடி மதிப்பிலான வெண்கல சிலைகளை போலீசார் சாதூர்யமாக மீட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேலூரைச் சேர்ந்த கண்ணையா என்பவரின் மகன் டி.ஆர்.ரகுபதி என்பவரிடம் இருந்து ஐம்பொன் மாரியம்மன் மற்றும் வெண்கல பெருமாள் சிலைகளை சில மர்மநபர்கள் திருடப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த சிலைகள் விருத்தாசலத்தில் உள்ள மகிமைதாஸ் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசாணையின்போது காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பழங்கால உலோக சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அல்லது உள்ளூரிலேயே நல்ல விலை கிடைத்தால் விற்றுவிடவும் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து சிலைகளை வாங்குபவர்களைத் தேடியுள்ளனர்.
இதனயைடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிஐடியின் தலைவர் டிஜிபி டாக்டர் ஜெயந்த் முரளி ஐபிஎஸ்., ஐஜிபி டாக்டர் ஆர்.தினகரன் ஐபிஎஸ்., மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழு செயல் திட்டத்தை வகுத்து, ஒரு குழுவை உருவாக்கியது. இதில் எஸ்பி மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் பிரேமசாந்தகுமாரி, சப் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன் சி.எஸ்.ஏ.எம், செல்வராஜ். சந்தனகுமார் மற்றும் தலைமைக் காவலர் பரமசிவன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழு சந்தேகம் வராமல் இருக்க கடத்தல்காரர்கள், விலையுயர்ந்த பழங்கால சிலைகளைத் விரும்பும் வசதி படைத்த சிலை சேகரிப்பவர்கள்/வாங்குபவர்களை தொடர்புகொண்டது. இதற்கிடையில் காவல்துறையினர் சாதூர்யமாக நடித்து கடத்தல்காரரின் நம்பிக்கையை பெற்றனர். இதனையடுத்து கடத்தல்காரர்கள் சிலையை விற்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இதனையடுத்து அவர்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல்காரர்கள் பழங்கால கோயில் சிலைகளை திருடிச் அதை மகிமைதாஸ் மூலம் வெளிநாட்டில் விற்பனை செய்யது வந்தது தெரியவந்தது. இவருடன் தொடர்பிலிருந்தவர்கள், சிலையை வாங்க முயன்றவர்கள் என பலர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.








