பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சி? -ஆம் ஆத்மி அரசை எச்சரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

பஞ்சாப் அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல்போக்கு நீடிக்கும் சூழலில், தனது கடிதங்களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்காவிட்டால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க நேரிடும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார். பஞ்சாப்…

பஞ்சாப் அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல்போக்கு நீடிக்கும் சூழலில், தனது கடிதங்களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்காவிட்டால், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரைக்க நேரிடும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பவர் பன்வாரிலால் புரோஹித். இதற்கு முன்னர் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்தார். தமிழ்நாடு ஆளுநராக இருந்தபோது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் பன்வாரிலால். அதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார் பன்வாரிலால். பஞ்சாப் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கொண்டிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில ஆசிரியர்கள் சிங்கப்பூருக்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதற்குமுதலமைச்சர் பகவந்த் மான், விளக்க கடிதம் அனுப்ப மறுப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அரசு முடிவு செய்தது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டசபையை கூட்டுவதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதையடுத்து ஆளுநரின் இந்தப் போக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது, அமைச்சரவை முடிவின் படி சட்டசபையை கூட்ட வேண்டியது ஆளுநர் கடமை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ஆளுநர், சட்டசபை கூட்ட அழைப்பு விடுத்தார். கடந்த ஜூன் மாதம் ஆம் பஞ்சாப் மாநில சட்டசபைல், ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் பல்கலைக் கழக வேந்தராக இனி மாநில முதலமைச்சர் பதவி வகிக்க வகை செய்யும் சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து பஞ்சாப் முதலமைச்சர் – ஆளுநர் இடையே அதிகார மோதல் நிலவி வரும் சூழலில் தான், தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றும் அப்படி பதில் அளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன் என்றும் எச்சரித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அதில், “நான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். அப்படிப் பதிலளிக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை செய்வேன். மேலும், எனது கடிதத்துக்கு பதிலளிக்காததின் மூலம் அரசமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்துக்கும் பதிலளிக்கவில்லை. எனவே, என் கடிதங்களுக்கு முறையாகப் பதில் அளிக்காவிடில் முதலமைச்சர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி ஆட்சிக்கும் பரிந்துரை செய்வேன்.

அரசியலமைப்பு நெறிமுறையின் தோல்வி குறித்து 356-வது பிரிவின்கீழ் இந்திய ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்புவது மற்றும் ஐ.பி.சி பிரிவு 124-ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, எனக்குப் பதில் அனுப்ப வேண்டும். மேலும் மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை தொடர்பாக நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான விஷயத்திலும் பதிலளிக்க வேண்டும். தவறினால் சட்டம் மற்றும் அரசியலமைப்பின்படி நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.