குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி ஜூலை 18 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை 24ம் தேதி 2022 வரை உள்ளது. அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற உள்ளது. 35 வயது நிறைவடைந்த இந்திய குடிமகன் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர் ஆகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக்க ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவின் (63 வயது) பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் வேட்பாளர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க பிரதமர் மோடி தேர்வு செய்வார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் வேட்பாளர் பெயர் பரிசீலனையில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு கேரளாவின் தற்போதைய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா யுகே, கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் திரெளபதி முர்முவின் பெயரே அதிகம் பரிசீலிக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
யார் இந்த திரெளபதி முர்மு?
ஒடிஸா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி பிறந்தார் திரெளபதி முர்மு.
இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஜார்க்கண்டில் அதிக அளவில் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக அஸ்ஸாம், திரிபுரா, பீகார், சத்தீஸ்கர், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த சமூகத்தினர் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
ஒடிஸா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் திரெளபதி முர்மு படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். மகன்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
அரசியல் ஆர்வம் காரணமாக திரெளபதி முர்மு பாஜகவில் இணைந்தார். ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். ஒடிஸாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் (2000-2004) வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே 18ம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்தார். ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரெளபதி முர்மு பெற்றார். அத்துடன், ஒடிஸா மாநிலத்திலிருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் விருப்பத் தேர்வாகவும் திரெளபதி முர்மு இருப்பார் என்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்: குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “அடுத்த 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலையும் மனதில் வைத்து பார்க்கும்போது, பழங்குடியின வேட்பாளர் நிராகரிக்கப்பட வாய்ப்பு குறைவுதான்” என்றார்.
அண்மையில், பாஜக செய்தித்தொடர்பாளர்களாக இருந்தவர்கள் முஸ்லிம்களின் இறைத் தூதராகக் கருதப்படும் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.
இதற்கு முஸ்லிம் நாடுகளிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எனவே, ஆரிஃப் முகமது கானும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ஒருவேளை ஆரிஃப் முகமது கான் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக கருதப்பட்டால், இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு திகழ்வார்” என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
-மணிகண்டன்