குடியரசு தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதையடுத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டன.
இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் குடியரசு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்த குழு தான் தேர்ந்தெடுக்கும். இந்த முறையும், அதே முறையில் தான் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில் 18ந்தேதி நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பயன்படுத்த இருக்கும் வாக்குபெட்டினை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இரண்டு வாக்கு பெட்டிகள் மற்றும் ஆவணங்களை பெற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் வாக்கும் பெட்டிகளையும், ஆவணங்களையும் சென்னை கொண்டு வந்தனர்.
இதையடுத்து தமிழகத்திற்கான வாக்கு பெட்டி மற்றும் ஆவணங்களை சென்னை தலைமைச் செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் புதுச்சேரிக்கான வாக்கு பெட்டிகளையும், ஆவணங்களையும் சாலை மார்க்கமாக புதுச்சேரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.








