ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்.6ஆம் தேதி கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வேலை செய்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு பெண்களுக்கான தனிப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்ற ரயில் பயண விதிமுறைகள் இருந்தும், அதனை மீறி பயணித்த கயவர்கள் இருவர் பெண்கள் பெட்டியில் ஏறி, அதில் பயணித்து கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.

இதனால் அந்த பெண் கூச்சலிட்டவுடன், கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலிலிருந்து அப்பெண்ணை கீழே தள்ளி விட்டுள்ளனர். கீழே விழுந்த அந்த பெண்ணின் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு  பலத்த காயங்களுடன்  தண்டவாளத்தில் கிடந்துள்ளார். பின்பு இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பெற்று வந்த  அந்த பெண் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் காவல்துறையினர்  31 வயதான ஹேமந்த் ராஜ்  என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுவரை குழந்தையின் இதயத் துடிப்பு இருந்தநிலையில், இன்று நின்றுவிட்டதாகவும் உடனடியாக அறுவைச் சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரு உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.