ராமநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்ததில் தாய் உயிரிழந்ததையடுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்
கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தை அடுத்த காத்தனேந்தல் பஞ்சாயத்தில் உள்ள பறையங்குளம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மனைவி சித்ராதேவி பிரசவத்துக்காக கோவிலாங்குளம் ஆரம்ப அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சித்ராதேவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்ததால் தான் தாய் உயிர் இழக்க நேரிட்டது என்று கூறி தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் இருபுறமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து இருதரப்பினருக்கும், போலீசாருக்கும், கிராமத்து மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அரசு மருத்துவர்கள் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் மறியல் கைவிடப்பட்டு உடல் சொந்த ஊருக்கு உறவினர்கள் வாங்கி சென்றனர்.
ரூபி.காமராஜ்