இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், இடிபாடுகளில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாம் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே ஆகும்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்டவுடன் அச்சமடைந்த மக்கள் அனைவரும் தங்களது குடியிருப்புகளை விட்டு உடனடியாக வெளியேறி சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தினால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளதாகவும், 300 பேர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான வீடுகள் இருளில் தவித்து வருகின்றனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.







