உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் கத்தார் நாட்டுக்கு, நாமக்கல் மாவட்டத்திலிருந்து, ஓன்றரை கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், பல நாடுகளுக்கும் நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் உள்ளன. அதுபோலவே நாமக்கல் மாவட்டத்திலிருந்து, முட்டை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் கத்தாரும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்றுவருவதால், முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்திலிருந்து கத்தாருக்கு ஒன்றரை கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்யவும், தேவைக்கு ஏற்ப இன்னும் கூடுதலாக முட்டைகள் அனுப்பவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
முட்டை உற்பத்தியில் முன்னிலையில் உள்ள துருக்கி நாட்டில் ஒரு பெட்டி முட்டை 36 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் நாமக்கல் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.








