திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 இளங்கலை மற்றும் தொல்லியல் துறை படிப்பு உள்ளிட்ட இரண்டு முதுகலை பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்திற்கு இன்று பல்கலைக்கழகத்தின் கல்விசார் நிலைக்குழு ஒப்புதல் வழங்கியது. அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தவிர புதிதாக இளங்கலை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சி, இளங்கலை சைபர் செக்யூரிட்டி மற்றும் இளங்கலை டேட்டா சைன்ஸ் ஆகிய மூன்று இளங்கலை புதிய பாடத்திட்டங்களும், முதுகலை தொல்லியல் துறை மற்றும் முதுகலை அறிவியல் அப்ளைட் பிசிக்ஸ் ஆகிய இரண்டு முதுகலை பாடத்திட்டங்களும் இந்த கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இத்தாலி நாட்டின் பாரிப் பல்கலைக்கழகத்துடன் தொல்லியல் துறை படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். மேலும் 2021-2022ம் கல்வியாண்டிற்கான பட்டமளிப்பு விழா கூடிய விரைவில் நடைபெறும்”
இவ்வாறு துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை படிப்பு தொடங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பே நியூஸ் 7 தமிழ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.