கர்நாடகாவில் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரின் வீடுகளின் முன்பு, அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு ஒட்டியுள்ள போஸ்டர்களால் கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்த காங்கிரஸ் கட்சியே, 136 இடங்களை கைப்பற்றி அங்கு ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிவுகிறது. இரு தலைவர்களின் வீடுகளின் முன்பு அவர்களுடைய ஆதரவாளர்கள், அடுத்த முதலமைச்சர் என குறிப்பிட்டு ஒட்டியுள்ள போஸ்டர்களால் தற்போது கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








