தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிஹான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, தென்கொரிய நாட்டின் சியோலில், ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் தென் கொரிய நடிகரும் பாடகருமான லீ ஜிஹானும் உயிரிழந்துள்ளார். இச்செய்தியை லீ ஜிஹானின் ஏஜென்சியான 935 என்டர்டெயின்மென்ட் உறுதி செய்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “935 என்டர்டெயின்மென்ட் மற்றும் 9 அட்டோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் விலைமதிப்பற்ற குடும்ப உறுப்பினரான நடிகர் லீ ஜிஹான் ஆகாயத்தில் நட்சத்திரமாகி நம்மை விட்டு பிரிந்துள்ளார். இவரது திடீர் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
லீ ஜிஹான் அனைவருக்கும் இனிமையான மற்றும் அன்பான நண்பராக இருந்தார். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே நம்மை வாழ்த்திய பிரகாசமான நடிகரான ஜி-ஹானை இனி பார்க்க முடியாது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
24 வயதான லீ ஜிஹான் தென்கொரிய பாட்டு போட்டியான ’Produce 101’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர். இவர் டுடே வாஸ் அனதர் நம் ஹியுன் டே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார். ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி லீ ஜிஹான் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.