நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை மீண்டும் உயர்த்தியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. மங்களூரு பூர்வீகம் என்றாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில். ’முகமூடி’யை அடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, ஹிர்த்திக் ரோஷனின் ’மொகஞ்ச தாரோ’ படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமனார். இந்தப் படத்தை அடுத்து அக்ஷய்குமாரின் ஹவுஸ்புல் 4 பட வாய்ப்பு வந்தது.
தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இப்போது பிரபாஸின் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா, ரன்வீர் சிங்குடன் சிர்கஸ், விஜய்யுடன் பீஸ்ட் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த வருட லாக்டவுனுக்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.2.5 கோடியாக அவர் உயர்த்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருவதால், தனது சம்பளத்தை மீண்டும் அவர் உயர்த்தியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர் இப்போது மூன்றரை கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்!







