பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், “வரும் டிசம்பர் 30, 31, ஜனவரி 2, 3, 4 ஆகிய 5 நாட்கள், அனைத்து நியாய விலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும். ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும், ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தவித குழப்பங்களும் இன்றி, 2 கோடியை 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவற்றை விநியோகம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் எல்லா நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக குடும்ப அட்டைகள் கொண்டுள்ள ஏறக்குறைய 250 கடைகளில், கூடுதல் பணியாளர்களை வைத்து டோக்கன் வழங்க முடிவு செய்துள்ளோம். யாருக்கும் சிரமம் இல்லாமல் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “நியாய விலைக்கடைகளுக்கு நேரில் வந்து பொருட்களை வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், எங்களுக்கு பதில் இவர் வாங்கிக் கொள்வார் என்று ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால், அதில் குறிப்பிடப்பட்ட நபர் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து சில கோரிக்கைகள் வந்திருக்கிறது. அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். மூன்று லட்சம் மெட்ரிக் டன் பச்சரிசியும், புழுங்கல் அரிசியும் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து வாங்கப்பட்டு வருகிறது “ என்று தெரிவித்தார்.