பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகள் முன்பு ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைத்து இடையூறு செய்வதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்ட டோக்கன்களில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் புகைப்படங்கள் இடம்பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், டோக்கன்களில் தலைவர்கள் படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் இன்று மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளில் முதலமைச்சர் மற்றும் அதிமுகவினரின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைத்து இடையூறு ஏற்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். பொங்கல் பரிசு டோக்கன்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டதை சுட்டிக் காட்டிய அவர், இதுசம்பந்தமாக வழக்கு தொடர அனுமதிக்குமாறு அவசர முறையீடு செய்தார்.
இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, அரசுத் தரப்புக்கு நோட்டீஸ் கொடுத்து வழக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தி அனுமதியளித்தது.







