திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலியாகி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன். இவர் தனது உறவினர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் மரியாயிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மைக்கேல்பாளையம் அருகே இவர்கள் வாகனம் வந்தபோது, எதிரே வந்த சரக்கு லாரி பலமாக மோதியுள்ளது. இதையடுத்து தூக்கி வீசப்பட்ட விஜய பிரபாகரனும் லியோ அமல ஜோசப்பும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் இருந்த லாரன்ஸ் என்பவர் சிகிச்சைகாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாலை விபத்தில் பலியான விஜயபிரபாகரனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இத்துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







