பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதையடுத்து, வெள்ளை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு திமுக அரசால் வழங்கப்பட்டதாகவும், இவைகளில் பெரும்பாலான மளிகைப்பொருட்கள் தரமற்று இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், குறைந்த விலைப்புள்ளி கொடுத்த நிறுவனத்தின் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்து விநியோகம் செய்ததால், பலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் ஒவ்வொன்றும் யாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.