அனைவருக்கும் தரமான பொங்கல் பரிசு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் விழாவை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பொங்கல் தொகுப்புகளில் பொருட்கள் தரமாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை தாமே நேரில் சென்று நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்தாகவும், மக்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் முறையாக நடைபெற்று வருவதையும், தரமான பொருட்கள் எவ்வித புகாரும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கும் பணிகளை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து, அனைவருக்கும் தரமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.