காவலர் வீரவணக்க நாள் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி!

நமக்காகவும் நமது பாதுகாப்புக்காகவும் வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம் என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

1959ஆம் ஆண்டு அக்.21இல் லடாக் பகுதியில் சீன ராணுவத் தாக்குதலில் மத்திய படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அக்.21 ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தங்கள் கடமை தவறாத பணியின் போது வீரமரணம் அடைந்த காவல் துறையினருக்கு மரியாதை செலுத்தும் தினமான ‘காவலர் வீர வணக்க நாள்’ இன்று!

நாம் நமது வீடுகளில் அச்சமின்றி வாழ்வதற்குக் காரணம், தன் கடமையை ஒருபோதும் தவறாத காவல்துறையினர்தான். காவல்துறையினரின் தன்னலமற்ற கடமையும், நேரம் பார்க்காத பணியாற்றும் ஒழுக்கமும், தன் உயிரையே துச்சமாகக் கருதும் மன உறுதியுமே நம்மையும் நம் நாட்டு மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இன்றைய தினத்தில், நமக்காகவும் நமது பாதுகாப்புக்காகவும் வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.