கும்பகோணம் அருகே போலீசாரால் தேடப்பட்டு வந்த இளைஞர் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் உள்ள குளத்தில் ஆண் ஒருவர் சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்ட போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது இறந்த நபரின் பெயர் சிலம்பரசன் என்பதும் இவர் சீர்காழி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் பாபு என்பவரது கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.
முன்னதாக அதிமுக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் சிலம்பரசனை தேடி அவர் தங்கியிருந்த பகுதிக்கு வந்ததாகவும் அதையறிந்த அவர் அருகில் உள்ள குளத்தில் குதித்து மறைந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை சிலம்பரசன் லேசான காயத்துடன் தண்ணீரில்
சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிலம்பரசனின் மரணத்திற்கு காவல்துறையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது உயிரிழப்பா அல்லது கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.







