உதகையில் பெண்ணை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கியூ பிரிவு உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உதகை அருகே காந்தள் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாகி. கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் சமீபத்தில் குணமாகியிருக்கிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று வெளியில் கடைக்குச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மறுநாள் காலையில் கியூ பிரிவைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முஸ்தபா என்பவர் மாகி நெஞ்சு வலியால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி மாகியின் உடலை காரில் கொண்டுவந்து மாகியின் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்.
மேலும் மாகிக்கு கொரோனாநோய் தொற்று இருந்ததால் வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் இல்லையென்றால் உடலை கொடுக்கமாட்டார்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதையடுத்து மாகியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்ட உறவினர்கள் சந்தேகமடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முஸ்தபாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் முஸ்தபாவிற்கும் உயிரிழந்த மாகிக்கும் கடந்த 15 ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. மேலும் கொலை நடந்த அன்று மாகி முஸ்தபாவை சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் மாகியை முஸ்தப்பா தாக்கியதாவும் தெரிகிறது. அப்போது மாகி படுகாயமடைந்து உயிரிழந்திருக்கிறார்.
இதையடுத்து ஒன்றும் நடக்காதது போல் மாகியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் முஸ்தபா. இந்த சூழலில் முஸ்தபா காவல்துறையில் பணியாற்றுவதால் அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று நினைத்து மாகியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதை தொடர்ந்து முஸ்தபாவை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







