சென்னை வேளச்சேரி டான்சி நகரில் வாக்கு பதிவு நடைபெற்ற இடத்திலிருந்து ஒருவர் வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நேற்றிரவு 7 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற நபரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்து வருகின்றனர். இதனால், வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் அனைவரும் கலைந்து சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் தான் மாநகராட்சி ஊழியராக பணியாற்றுவதாகக் கூறியுள்ளார்.







