ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் தேர்ச்சி ஆயுள்வரை செல்லுபடியாக்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் தேர்ச்சி 7 ஆண்டுகள் வரையே செல்லுபடியாகும் என்று இருந்த நடைமுறையை மாற்றி ஆயுள் முழுவதும் செல்லுபடியாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி ஆயுள்வரை செல்லுபடியாகும் என சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் அதற்கான அரசாணையை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வாரியத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களும் ஆயுள்வரை செல்லும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக பாமக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சுமார் 80 ஆயிரம் பேருக்கு கடந்த 7 ஆண்டுகளில் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், வயது உச்சவரம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.