தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து பெற்றார்.
பாமகவில் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் சென்னையிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்த அன்புமணி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். அவருடன், பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். விஜயகாந்த் தமிழ்நாட்டு அரசியலை தைரியமாக எதிர்கொண்டவர். அவர் மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது. இது நட்பு ரீதியாக சந்தித்த ஒரு நிகழ்ச்சி” என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் வருங்காலத்தில் இப்போது இருக்கக்கூடிய சூழல் மாறும். சந்திப்பின்போது மருத்துவர் ராமதாசை குறித்து விசாரித்தார் விஜயகாந்த். இது நல்ல ஒரு சந்திப்பு என்றும் குறிப்பிட்டார்.
தேமுதிக ஆரம்பிக்கப்பட்ட புதிதில் வட மாவட்டங்களில் தேமுதிக – பாமக இடையே பிரச்னைகள் உண்டாகின. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தன. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெற்ற நிலையில், அதன்பிறகு இரு கட்சிகளும் நட்பு பாராட்டி வருகின்றன. இந்த நிலையில் விஜயகாந்த் – அன்புமணி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.