சென்னையில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்புமணி ராமதாஸ். தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்திற்கு முன்னேறி செல்லும் வகையில், பாமக 2.0 உருவாக்க வேண்டும் என முனைப்பில் அன்புமணி தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணி அரசியலில் கடந்த வந்த பாதையைப் பார்ப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கிய “பசுமைத்தாயகம்” எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பின் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி ராமதாஸ். 2004-ம் ஆண்டு திமுக – பாமக கூட்டணி ஒப்பந்தத்தின்ப்படி வழங்கப்பட்ட மாநிலங்களவை இடத்திற்கு தேர்வாகி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினரானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்புமணிக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது இந்தியாவிலேயே முதன்முறையாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். 2005ம் ஆண்டு கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ சேவை வழங்க இவர் தொடங்கிய தேசிய ஊரக சுகாதார இயக்கம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.
சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை, அன்புமணி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தொடங்கப்பட்டது தான். பொதுஇடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கை படம் அச்சடித்தது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டார்
பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அன்புமணி, இந்தியாவில் முதன்முறையாக தேசிய மதுக்கொள்கையை உருவாக்கினார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதியை உலக மது ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் அன்புமணி.
ராமதாஸ்-க்கு அடுத்து பாமகவின் முகமாக அறியப்பட்ட அன்புமணி, 2006ம் ஆண்டு அக்கட்சியின் இளைஞரணி தலைவராக உயர்ந்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் அன்புமணி ராமதாஸ்..மாற்றம்… முன்னேற்றம்.. அன்புமணி.. என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்த பாமக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸும் தோல்வி அடைந்தார்.2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தருமபுரி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார் அன்புமணி. 2019-ம் ஆண்டு அதிமுக-பாமக ஒப்பந்தத்தின்படி மாநிலங்களவை இடம் பாமக வழங்கப்பட்டது. இதன்மூலம் மீண்டும் எம்பியானார். தனது 25 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களைக் கடந்து பாமக தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்..
பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே தனது விருப்பம் என தொடர்ந்து தெரிவித்து வரும் அன்புமணி, முன்பு பல்வேறு சவால்களும் அணிவகுத்து நிற்கின்றன…இளைஞர்களின் வாக்குகளை பெறுவது… கட்சி மீதான விமர்சனங்களை எதிர்கொள்வது… கூட்டணி குறித்த நிலைப்பாடு உள்ளிட்டவற்றை சமாளித்து அன்புமணி ராமதாஸ் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.