முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயம் வந்த பிரதமர் மோடி ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியினருடன் கலந்துரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் சென்னை விமான நிலையத்தில் 1,200 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பல்லாரவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெயில்வே, நெடுஞ்சாலைத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் 8.45 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். தொடர்ந்து அவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு ஓய்வெடுத்தார்.
பிரதமர் மோடி இன்று காலை கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள புலிகள் பாதுகாப்பு வன சரணாலயத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணம் செய்த பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பிரதமர் மோடி கரும்பு உணவு அளித்தார். சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தெப்பக்காடு முகாமில் இருந்து மீண்டும் மைசூரு செல்லும் வழியில் மசனக்குடியில் பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். மசனக்குடியில் காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி சாலையின் இரு புறமும் இருந்த பொதுமக்கள், பாஜகவினரை பார்த்து கையசைத்தார். முதுமலை பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி மைசூரு புறப்பட்டார்.







