ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நடைபெறும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி மூலம் பங்கேற்கிறாா்.
ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, இன்று நடக்கிறது. இந்த மாநாட்டை நடத்தும் இத்தாலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அதில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில், தலிபான்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, சர்வதேச பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.
சா்வதேச அளவில் முக்கிய விஷயங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் இந்த கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது மாநாடு தஜிகிஸ்தானில் நடைபெற்ற போது, காணொலி மூலம் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கான் விவகாரம் குறித்து பேசியிருந்தார். ஆப்கானிஸ்தான் தொடா்பாக நியூயார்க்கில் சமீபத்தில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சா்களின் மாநாட்டில், எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.







