அமெரிக்க பயணத்தின் போது நியூயார்க்கில் பிரதமர் மோடி உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை சந்திக்க உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி , நாளை முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நாளை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்பார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர், நாளை மறுநாள், அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான தொழில், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள் மற்றும் பலர் உட்பட சுமார் 24 பேரை சந்திக்கிறார்.
அதன்படி, டெஸ்லா இணை நிறுவனர் எலோன் மஸ்க், வானியற்பியல் விஞ்ஞானி நீல் டி கிராஸ் டைசன், கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்க பாடகர் ஃபல்குனி ஷா, பால் ரோமர், நிக்கோலஸ் நாசிம் தலேப், ரே டாலியோ, ஜெஃப் ஸ்மித், மைக்கேல் ஃப்ரோமான் டேனியல் ரஸ்ஸல், எல்பிரிட்ஜ் கோல்பி ஆகியோரை பிரதமர் சந்திக்கிறார்.








