டாக்டராக வேண்டும் என்ற மாணவியின் பேச்சைக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி கண்கலங்கினார்.
குஜராத் மாநிலத்தில் அரசின் நலத்திட்ட பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது உரையாற்றிய பிரதமர், அரசின் திட்டங்களைப் பற்றிய தகவல் மக்களுக்கு தெரியவில்லை என்றால், அவை காகிதத்தில் இருக்கும் அல்லது தகுதியற்ற மக்கள் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அயுப் பட்டேல் என்ற பயனாளியுடன் உரையாடி அவரது பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். தான் பார்வை இழப்பு பிரச்னையால் அவதிப்படுவதாக தெரிவித்த அயுப் பட்டேல், தனக்கு இரண்டு மகள்கள் உள்ளதாகவும், மூத்த மகள் டாக்டராக வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட்டார். அருகில் அவரது மகள் ஆல்யாவும் அமர்ந்திருந்தார்.
உடனே எழுந்து நின்ற ஆல்யாவிடம் சிரித்தபடியே “நீங்கள் எதற்காக டாக்டராக வேண்டும் என விரும்புகிறீர்கள்” என பிரதமர் கேட்டார். அதற்கு அந்த சிறுமியோ, “என்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட மருத்துவப் பிரச்னைகளே நான் டாக்டராக விரும்புவதற்கு காரணம்” என அழ ஆரம்பித்துவிட்டார்.
https://twitter.com/PIB_India/status/1524662545512304641
இதனைக் கேட்டவுடன் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் பேச முடியாமல் தடுமாறினார். தொடர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு “உங்கள் மகள்களின் கனவை நனவாக்க உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று அயுப் பட்டேலுக்கு நம்பிக்கை தந்தார்.







