உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, இந்திய ஜனநாயகத்தில் ஜூன் 26 ஒரு கருப்பு நாள் என்றார். 47 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சி காரணமாக ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பலன் அடைந்தது என குறிப்பிட்ட நரேந்திர மோடி, ஆனால், அடிமைப்பட்டுக் கிடந்ததால் இந்தியாவால் பலன் பெற முடியாமல் போனது என தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய நான்காவது தொழிற்புரட்சியில் இந்தியா பின்தங்காது எனக் கூறிய அவர், நமது நாடு தற்போது உலகையே வழிநடத்தி வருகிறது என்றார்.
நாம் நமது ஜனநாயகத்தை என்னி தற்போது பெருமைப்பட முடியும் என்றும், ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கலாச்சாரம், உணவு, உடை, இசை, பழக்க வழக்கங்கள் எனும் பன்முகத்தன்மை, இந்திய ஜனநாயகத்தை துடிப்ப மிக்கதாக ஆக்கி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஜனநாயகம் பலன் தரும் என்பதையும் தந்து கொண்டிருக்கிறது என்பதையும் இந்தியா உலகிற்கு நிரூபித்து வருவதாகக் கூறினார்.
தற்போது நமது நாட்டில் யாரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்றும், 99 சதவீத கிாமங்களில் மின்சாரம் உள்ளது என்றும், 99 சதவீத மக்கள் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவசமக உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஒவ்வொரு 10 நாட்களிலும் ஒரு யூனிகான் நிறுவனம் (சுமார் ரூ. 7,800 கோடி மதிப்புகொண்டது) உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவில் அரசின் கொள்கைகளை சார்ந்தது அல்ல என்று தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் என கூறினார்.
தற்போது நாட்டில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டது என்றும், இனி சுத்தத்தை பேணிக் காப்பது தங்கள் பொறுப்பு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார்.
10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நிர்ணயிக்கப்பட்ட கால இலக்கிற்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே இந்தியா அதனை அடைந்துவிட்டது என பெருமிதம் தெரிவித்த நரேந்திர மோடி, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு இந்தியா தற்போது தயாராக இருக்கிறது என்றார்.
இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமானால் 10-15 ஆண்டுகள் ஆகும் என கூறிய காலம் ஒன்று உண்டு என தெரிவித்த பிரதமர், ஆனால், இந்தியாவில் தற்போது 90 சதவீத மக்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டிருப்பதாகவும், 95 சதவீத மக்கள் ஒரு தவறை தடுப்பூசியை போட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான போட்டியில் இந்தியா ஒருபோதும் இருக்காது எனும் நிலை மாறிவிட்டது என தெரிவித்த பிரதமர், தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் 3வது பெரிய நாடு இந்தியா என குறிப்பிட்டார்.
எளிய ரக செல்போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், மொபைல் போன்களின் உற்பத்தியில் உலகின் 2வது பெரிய நாடாகவும் இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.