மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு தாய்லாந்து மருத்துவர்கள் சிகிச்சை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு தாய்லாந்து மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. இதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 26…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு தாய்லாந்து மருத்துவர்கள்
குழு சிகிச்சை அளித்தது. இதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 26 வயதான பார்வதி, யானையின் இரு கண்ணிலும் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கு மேலாக கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. அதில் முன்னேற்றம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும்,
தாய்லாந்து மருத்துவர்கள் இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் வழியாக பார்வதி
யானையை பார்வையிட்டு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென பரிந்துரை
செய்து வந்தனர்.

இந்நிலையில், இன்று தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை
பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள யானை பார்வதியை நேரில் பார்வையிட்டு அதற்கு கன்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்தனர்.

அங்கு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாய்லாந்து மருத்துவக் குழுவிடம் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார். இதில் ஆட்சியர் அனீஸ் சேகர், மேயர் இந்திராணி, மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் உள்ளிடோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு பார்வதி
யானையை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மதுரை கால்நடை மருத்துவ
குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சையில் முன்னேற்றமும்
இல்லை. இடது கண்ணில் பாதிப்பு வலது பக்க பரவ தொடங்கியது.
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து தூதரை சந்தித்து கோரிக்கை
வைக்கப்பட்டது.

தாய்லாந்தில் தான் யானைக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய சிறந்த மருத்துவர்கள்
இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2 முறை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமும் யானைக்கு சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். தற்போது,  எனது கோரிக்கையை ஏற்று தாய்லாந்து மருத்துவர்கள் 7 பேர் கொண்ட குழு நேரில் வந்து யானையை பரிசோதனை செய்துள்ளனர். இந்தப் பரிசோதனையானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நாளை சென்னையில் இருந்து வரக்கூடிய மருத்துவ குழுவினருடன் இணைந்து இந்த பரிசோதனை இரண்டாவது நாளாக தொடரும்.

யானைக்கு அறுவை சிகிச்சை என்பது கடினமானது என்பதால் மருந்து மூலமாகவே
குணப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள் நலனுக்காகவும் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.