கோவை சித்தாபுதூரில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சி வெளியானது; அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பாஜக அலுவலகம் நோக்கி பெட்ரோல் குண்டை வீசியதாகக் கூறப்படுகிறது. அங்கு காவலுக்கு இருந்த காவலர் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
காவலர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு இத்தகவலை தெரிவித்ததை அடுத்து, அந்தப் பகுதி காவல் துறை அதிகாரிகள் விரைந்தனர். அந்தப் பகுதியில் வீசப்பட்டிருந்த பெட்ரோல் குண்டை ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே சில முறை இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. காவல் துறை சரியாக விசாரணை நடத்தாமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்டன. இந்த முறையாவது உரிய விசாரணை நடத்தி இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அந்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டித்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.








