பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில் விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு சென்ட் நிலம் வைத்து இருந்தாலும், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும் அது உங்களது தான் என்று சொல்லும் துறைதான் வருவாய்த்துறை என்றும், சான்றிதழ்கள் வழங்குவது பெரிய பணி என்றும் தெரிவித்தார்.
ஒரு சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் 4,65,000 சான்றிதழ்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்ததாவும், முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் பணிகள் விரைவாக மேற்கொண்டு, தற்போது 785 சான்றிதழ் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
வீட்டு மனை பட்டாவை பொறுத்தவரை அரசு புறம்போக்கு, அரசு நத்தமாக இருந்தால் பட்டா கொடுக்க முடியாது. ஆனால் அரசு கிராம நத்தமாக இருந்தால் பட்டா கொடுக்கலாம். அதற்கான வழியை கண்டுபிடித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அதிலும், சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டா பிரச்னைகளை பெரிதாக பேசுவதாகவும், அந்த 4 மாவட்டங்களில் பட்டா பிரச்னை தொடர்பாக பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்பு, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி பிரச்னைகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நரிக்குறவர்கள், இருளர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 48,000 இருளர்கள் மற்றும் நரிக்குறவர்கள் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 33,607 பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதோடு அவர்கள் வீடு கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என்றும், 7,000 குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்பதோடு, தந்தை பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை என்றும், இப்போது அனைவருக்கும் பட்டா கொடுக்கவுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார். பத்து ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டதாவும், இதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்யுள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் கூறினார்.







