நெடுஞ்சாலையின் பெயரை நீக்கியதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலை நாட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள்.
1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. அரசு கொண்டாடியது.
அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்ற, மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார். ஆனால், எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது. தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார் முதல்வர். ஏற்கனவே, சென்னை வான்ஊர்தி நிலையத்தில் இருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.
தமிழக முதல் அமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடி, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும். தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.