தஞ்சாவூர் பெரியகோயில் 80 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூர் பெரியகோயில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோயிலுக்குள் வழக்கம்போல தினந்தோறும் நான்கு கால பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால், கோயில்கள் இன்று திறக்கப்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி, தஞ்சாவூர் பெரியகோயிலும் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, முதல் கால பூஜை நடைபெற்றது. இக்கோயிலிலுள்ள பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வாராஹி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகியவற்றில் பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு நிற்க வட்டம் வரையப்பட்டுள்ளது.
பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவுவாயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வெப்பமானி மூலம் பரிசோதனையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. எனவும் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். இதேபோல, மாவட்டத்திலுள்ள மற்ற கோயில்களும், இன்று முதல் திறக்கப்படவுள்ளதையொட்டி, கொரோனா தடுப்புத் தொடர்பாகத் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.