சென்னை பெரம்பூர் ஜே.எல்.நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒரு வாரமாகியும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு பெரம்பூர் ஜே.எல்.கோல்டு பேலஸ்
நகைக் கடையில் இருந்து 9 கிலோ தங்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர
நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் கட் செய்து தங்கம் மற்றும் வைர நகைகளை எடுத்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹாட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு தனிப்படைகள் சென்றுள்ளன. தொலைபேசி உரையாடலை மையமாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் இதே போன்று கொள்ளை வழக்கில் தொடர்புடைய இரு ஆந்திரா நபர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரம்பூர் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திரா நபர்கள் விடுவிக்கப்பட்டனர். தற்போதுவரை இந்த வழக்கில் 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை இந்த வழக்கில் கொள்ளையர்கள் குறித்த எந்த துப்பும் கிடைக்காததால் போலீஸார் திணறி வருகின்றனர்.
-ம.பவித்ரா