எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கரந்தமலையைச் சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் பரவின. நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அவை பரவின. இப்போது கிராமப்பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இவை கண்களை மட்டுமே தாக்குகின்றனர். எறும்புகள் உடலில் ஏறுவதால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் காட்டிலுள்ள பாம்பு, முயல் போன்ற காட்டுயிர்கள் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்களின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுடைய கன்றுகளையும் இவை கொல்வதாகவும் எறும்புகள் பரவியுள்ள மலையடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்வதாக கூறப்படுகிறது.
இது குறித்து கரந்தமலை வனத்துறை வனவர் முத்துச்சாமி கூறியதாவது, இது புதுவகையான எறும்பாக உள்ளது என்றும் இதுபோன்ற எறும்பு வகைகளை இதுவரை நாங்களே கண்டதில்லை என்றார். இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால், காட்டுயிர்கள் அழிகின்றன எனவும் அவர் கூறினார்.
நத்தம் கால்நடை மருத்துவர் சங்கமுத்து எறும்பு பற்றி கூறுகையில் இப்படியொரு எறும்பு இருப்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இந்த எறும்புகளின் மீதான அச்சத்தினால் மலை அடிவாரத்தில் விவசாயம் செய்து வந்த பல குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வேறு பகுதிகளுக்குச் இடம் பெயர்ந்து வருகின்றனர்.