கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இரவு முழுவதும் கொட்டி
தீர்த்த கன மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது – இதனால், மழை
நீர் வடிகாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில் இரவு
முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால்,
மழை நீர் வடிகாலை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாட்டில்
மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பகலில் கடுமையான
வெயிலும், இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவும் கன மழை பெய்தது. மாவட்டத்தில்
போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பெனுகொண்டபுரம், பாரூர், நெடுங்கல் உள்ளிட்ட பல
இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக போச்சம்பள்ளியில் 99.20 மில்லி மீட்டரும்,
ஊத்தங்கரையில் 86.20 மில்லி மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கன மழையால் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிராமத்தில், சாலைகள்
மழை நீரில் மூழ்கி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும், இரவு முழுவதும் இடி
மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழையால், சாலையோரம் இருந்த மரம் முறிந்து
விழுந்ததுடன் மின் கம்பிகளும் அறுந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் மின் வசதி இல்லமலும், வீடுகளுக்குள் மழை நீர்
சூழ்ந்ததாலும் இரவு முழுவதும் உறங்க முடியாமல் மிகுந்த அவதிபட்டனர்.
நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் இல்லாமல் பொதுமக்கள் அவதிபட்டு வந்த
நிலையில், கொல்லப்பட்டி கிராமத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இருப்பினும் அந்த மழை நீர் வடிகால் முறையான திட்டமிடல் இல்லாமல், சாலையின்
உயரத்தை விட அதிக உயரத்தில் அமைக்கப்பட்டதால் மழை நீர் முழுமையாக
வடியாமல், குடியிருப்புக்குள் புகுந்து மக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.
இந்நிலையில், மழை நீர் வடிகால் வாய்களை முறையாக அமைக்க வலியுறுத்தி,
பாதிக்கப்பட்ட மக்கள் திடீரென கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை தேசிய
நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை
அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பாபு, உடனடியாக மழை
நீர் வடிகால் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததுடன், உடனடியாக சீரமைப்பு
பணிகளை துவங்க உத்தரவிட்டார். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கு. பாலமுருகன்