பெகாசஸ் விவகாரம், இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்து உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரத்தை, தாங்கள் எழுப்பியதாகவும், தற்போது, நாங்கள் என்ன கூறியிருந்தோமோ அதற்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், ‘பெகாசஸ்’ மென் பொருளை அங்கீகரித்தது யார்? இது யாருக்கு எதிராகப் பயன்படுப்பட்டுள்ளது, நமது மக்களின் தகவல்களை பிற நாடுகள் பெற்றுள்ளனவா? என்ற 3 கேள்விகளை எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என தெரிவித்த அவர், இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மிகப்பெரிய நடவடிக்கை என்றும் தெரிவித்தார். பெகாசஸ் விவகாரத்தை தாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பி விவாதம் நடத்த முயற்சிப்போம் என்றும் அவர் கூறினார்.








