#Tirupati -யில் தரிசனம் செய்ய பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பவன் கல்யாண் மகள்!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள், நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தை ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. திருமலை ஏழுமலையான் லட்டு…

Pawan Kalyan's daughter signs affidavit for darshan in #Tirupati!

திருப்பதியில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவரது மகள், நம்பிக்கை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடும் புகைப்படத்தை ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

திருமலை ஏழுமலையான் லட்டு கலப்பட விவகாரத்திற்காக கடந்த 10 நாள்களுக்கு முன் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பிரயாசித்த தீட்சை மேற்கொண்டு முக்கிய கோயில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அந்த பிராயசித்த தீட்சை திருமலை ஏழுமலையான் தரிசனத்துடன் இன்று (அக். 2) நிறைவு பெறுகிறது. இதற்காக திருப்பதி வந்தடைந்த பவன் கல்யாண், அலிபிரி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நேற்று (அக். 1) மலையேறினார். அவருடன் அவரது மகள்கள் ஆத்யா மற்றும் போலேனாவும் இன்று திருப்பதிக்கு உடன் வந்துள்ளனர்.

ஒருவரின் நம்பிக்கையை அறிவிக்கும் நடைமுறை, திருமலையில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆந்திர வருவாய் அறக்கட்டளை-1, விதி எண் 16 இன் எம்.எஸ்எண்-311-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் விசுவாச வடிவத்தில் தரிசனத்திற்குமுன், வைகுண்ட வரிசை வளாகத்தில் ஓர் அறிவிப்பை வழங்க வேண்டும். இது திருமலை திருப்பதி தேவஸ்தான பொது விதிமுறைகள் விதி 136 இன் படி உள்ளது.

இந்நிலையில், பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவாவுக்கு பிறந்த போலேனா, இந்து அல்லாதவர் என்பதால் தரிசனத்துக்கு முன்பு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். அவர் 18 வயதுக்கு உள்பட்ட பெண் என்பதால், பவன் கல்யாணும் மகளின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, கடந்த வாரம் திருமலைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்து அல்லாதவர் என்பதால் அவரை பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட பாஜக வலியுறுத்தியது. தற்போது, பவன் கல்யாண் மகளை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வைத்ததன் மூலம், ஜெகன் மோகன் ரெட்டிக்கு பவன் கல்யாண் மறைமுக பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் திருப்பதி பயணத்துக்கு காவல்துறை உரிய அனுமதி வழங்கவில்லை என்று பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.