தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள புகழ்பெற்ற பட்டினப்பிரவேசம் திருவிழாவிற்கு, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கொடிமரத்திற்கு எழுந்தருளினார் அதனை அடுத்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கொடி மரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 18-ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 20-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவமும் 21-ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருநெறிய தெய்வத்தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. மேலும், பல்வேறு தமிழ் சைவம் சார்ந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. விழா நிறைவாக 22-ஆம் தேதி ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதற்கு முன்பு, பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது, அதனைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை எழுந்த நிலையில், அதற்கான தடையை நீக்கியது மாவட்ட நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: