காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சி மக்கள் தங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஜல்லிக்குழி பகுதியில் பக்கத்து கிராமத்து மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்துள்ளது சேந்தமங்கலம் ஊராட்சி. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் குடிநீர் தேவைக்காக ஊரின் அருகில் ஜல்லிக்குழி பகுதியில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் இவ்வூர் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்குழி பகுதியில் பக்கத்து ஊரான பொடவூரை சேர்ந்த மக்கள் அனுமதியின்றி குடியிருப்ப்புகளை அமைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி அவர்கள் பயன்படுத்திய கழிவு நீரை ஜல்லிக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.இதனால் சேந்தமங்கலம் மக்களின் குடிநீர் ஆதாரம் மாசடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கடந்த கிராம சபை கூட்டத்தில் சட்டவிரோதமாக
குடியிருப்புகளை அமைத்துள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆக்கிரமிப்பு செய்திருந்த மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.
—வேந்தன்