பாலியல் வழக்கில் கைதான பாதிரியாரின் வாட்ஸ்-ஆப் குழுக்களை போலீசார் பட்டியல் எடுத்துள்ளனர். இந்த வழக்கு குறித்தும், அதன் பின்னணி குறித்தும் தற்போது பார்க்கலாம்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிலாங்காலை தேவாலயத்தின் பாதிரியார் பெனடிக் ஆண்டோ பல இளம் பெண்களுடன் தவறான உறவில் இருந்து வந்தது தொடர்பான ஆபாசப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிரார்த்தனைக்காக பேராலையத்திற்கு வரும் பல திருமணமான மற்றும் இளம் பெண்களுக்கு பாதிரியார் பெனடிக் ஆண்டோ, பாலியல் தொல்லைகள் அளித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதிரியார் பெனடிக் ஆண்டோ மீது பேச்சிப்பாறையைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். பெனடிக் ஆண்டோ குலசேகரம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிபோது தன்னுடன் பழகி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தவறான ஆசைகளை தூண்டும் வகையில் வாட்ஸ்-ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாகவும் புகாரில் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், பாதிரியார் பெனடிக் ஆண்டோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பாதிரியார் பெனடிக் ஆண்டோவோ, கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் தலைமறைவானார். தனிப்படைகள் அமைத்து பாதிரியாரை பெங்களூரு, கேரளா ஆகிய இடங்களுக்குச் சென்று தேடி வந்தனர். மார்ச் 20 ஆம் தேதி மாவட்ட நீதிமன்றத்தில் சரண்டைய வழக்கறிஞருடன் வந்த பாதிரியார் பெனடிக் ஆண்டோவை போலீசார் வழியில் மடக்கி கைது செய்தனர்.
அவரிடம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 10 மணிநேர விசாரணைக்குப் பின் பெனடிக் ஆண்டோவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையின்போது பாதிரியார் பெனடிக் ஆண்டோ கூறிய பல தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிரியார் என்பதற்காக பெனடிக் ஆண்டோ காதலித்த பெண்ணை திருமணம் செய்ய குடும்பத்தார் எதிர்த்ததால், அவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
சென்னையில் பணியாற்றி வரும் அந்த பெண் உட்பட, பல பெண்களுடன் பெனடிக் ஆண்டோ நிர்வாண வீடியோ கால் பேசி பதிவு செய்ததும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த சில நாட்கள் கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, சட்டக் கல்லூரி மாணவி மற்றும் பெண் மருத்துவர் ஆகியோருடன் ஒரே அறையில் வசித்ததாக போலீசார் விசாரணையில் பெனடிக் ஆண்டோ வாக்குமூலம் அளித்தார்.
பெனடிக் ஆண்டோ தன்னுடன் பணியாற்றிய 30 பாதிரியார்கள் மற்றும் 5 பெண்கள் அடங்கிய வாட்ஸ்-ஆப் குழுவை உருவாக்கி, அதில் தன்னுடன் நெருக்கமாக பேசும் இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்-ஆப் ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்து வந்ததாகவும் வாக்குமூலத்தில் அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக அவரிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 13 சிம்-கார்டுகள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 6 சிம்-கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டவை என தெரியவந்த நிலையில், அது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிரியார் பெனடிக் ஆண்டோ தவறு செய்திருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அவரை காவலில் எடுத்தும் விசாரிப்போம் எனவும் மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார். பாதிரியார் மற்றும் இளம் பெண்ணின் ஆபாசப் புகைப்படங்களை யாரும் சமூக வலைதளம் வாயிலாக பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே பாதிரியார் பெனடிக் ஆண்டோவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர் துவங்கிய வாட்ஸ்-ஆப் குழுவில் இருந்த 30 பாதிரியார்கள் மற்றும் பெண்கள் யார்..? யார்..? என பட்டியலெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.