தூத்துக்குடி – இலங்கை இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக துறைமுக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
10 நாடுகளை சேர்ந்த 698 பயணிகள் சொகுசு கப்பலில் சுற்றுலா மேற்கொண்டு வரும் நிலையில், அந்த கப்பல் இன்று தூத்துக்குடி வந்தடைந்தது. இதையடுத்து மங்கள வாத்தியம் முழங்க ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக அனைவரும் பேருந்தில் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துறைமுக தலைவர் ராமச்சந்திரன், ”இதுபோன்ற பயணிகள் கப்பல், தொடர்ச்சியாக தூத்துக்குடி துறைமுகம் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக இன்று இந்த பயணியர் கப்பல் இங்கே வந்துள்ளது. இதுபோன்ற பயணிகள் கப்பல் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும் இதனால் தமிழகத்திற்கு அன்னிய செலவாணி உயரும். தூத்துக்குடி-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தூத்துக்குடி-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும்” என்று கூறினார்.







