நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை – வெளிநடப்பு செய்த எம்.பி மஹுவா மொய்த்ரா!

நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரான திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா,  தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக கூறி பாதியிலேயே வெளிநடப்பு செய்தார்.  மேற்கு வங்க மாநிலத்தில்…

நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் குழு முன்பு விசாரணைக்கு ஆஜரான திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா,  தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக கூறி பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் எம்.பி மஹுவா மொய்த்ரா.  மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக மஹுவா மொய்த்ரா உள்ளார்.  இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை.  இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.  மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தெரிவித்த கருத்தை வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

குழுவின் தலைவர் வினோத் கே சோங்கர் இருவரிடமும் விசாரணை நடத்தி, முக்கிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மக்களவை நெறிமுறைக் குழு உத்தரவிட்டது.

இந்நிலையில் டெல்லியில் இன்று மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் குழு முன்பு ஆஜரானார்.  அப்போது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டதாக கண்டனம் தெரிவித்த அவர், விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.