சேலத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் தருவதாக தலைமை ஆசிரியர் மிரட்டுவதாக கூறி, மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை கொரோனா பரவலை தடுக்க 2 முறை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பலர் தங்களது வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டையில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஏழை மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக சான்றிதழ் கேட்டபோது, பள்ளித் தலைமை ஆசிரியர் கல்விக் கட்டணத்தை கட்டிய பிறகே சான்றிதழ் தரப்படும் என்று கூறுவதால், கல்லூரியில் சேரமுடியாமல் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளாகி வருகின்றனர்.
10ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளி ஆக இருந்த தனியார் பள்ளி, 11 மற்றும் 12 வகுப்பில் தனியார் அமைப்போடு இனைந்து செயல்பட்டு வருகிறது. இதனால், ஏழை மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மேல்நிலைப் பள்ளியை அரசு உதவி பெறும் பள்ளியாக மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.








