பரந்தூர் விமான நிலையம் – மத்திய அரசு தள அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது. சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05…

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையின் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம் நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக்டேர் அளவிலான நிலத்தினையும், திருப்பெரும்புதூர் வட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தினை கையகப்படுத்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

முன்னதாக டிட்கோ பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை உருவாக்கியது. இதன் சுமார் 32 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக இந்த விமான நிலையம் உருவாக்கப்படும் எனவும், 100 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் மூன்று டெர்மினல்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டது.

மேலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகானபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.  ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இருந்தும் தமிழ்நாடு அரசு சார்பில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனையடுத்து டிட்கோ நிறுவனம் 2023ல் பரந்தூர் விமான நிலையத்திற்கு தள அனுமதிக்கான விண்ணப்பத்தை அனுப்பியது. மேலும், தள அனுமதி தவிர, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் திட்ட அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றிற்கும் விண்ணப்பித்தது. டிசம்பர் 2023ல், பாதுகாப்பு அமைச்சகத்தால் தள அனுமதிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது. கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல் குழு, தமிழ்நாட்டில் உள்ள பரந்தூரில் உள்ள உத்தேச விமான நிலையத்திற்கு இட அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு,  மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பை டிட்கோ மோற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.